குரு நாதர் ஆசியுடன்

குரு நாதர் ஆசியுடன்.............

இந்த தளத்தினை காணும் அனைவரும் குருநாதர் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் தெய்வ காந்த சக்தியும், விஷகலையினை அமிர்த கலையாக மாற்றும் துருவ நட்சத்திர சக்தியின் ஈர்ப்பும், நவ கோள்கள், நட்சத்திர இராசி மண்டலங்கள், சப்த ரிஷி மண்டலத்தின் சக்திகளும், சத்வ குண தேவதைகளின் அருளும், சித்த மண்டல சித்தர்களின் வழிகாட்டலும், ஆதி மூல சக்தி பரா பட்டாரிகையின் அருளும் ஈர்ப்பும் பெற்று, தம்மில் தெய்வ குணம் வளரப்பெற்று தெய்வசக்தியினை ஈர்த்து அனைத்து செல்வங்கள், போக பாக்கியங்கள், உடல் நலம், மன நலம், ஆன்ம சக்தி அருள் ஞானம் பெற்றிடுவர்!


இந்த தளத்தில் உள்ளவற்றை படிப்பதனால் மனம் தெய்வ சக்தியை ஈர்க்கும் பக்குவம் பெற்று மகரிஷிகளின் ஈர்ப்பு வட்டத்திற்குள் வந்து ஆன்ம சக்தி உயர்ந்திடும்!


ஓம் ஸ்ரீ காமேஸ்வரியம்பா ஸஹித ஸ்ரீ காமேஸ்வர குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பா ஸஹித ஸ்ரீ அகஸ்திய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ விஸ்வாமித்ர குருவே நமஹ

ஓம் ஸ்ரீ வஷிஷ்ட குருவே நமஹ

ஓம் ஸ்ரீ பிரம்மா குருவே நமஹ

ஓம் ஸ்ரீ தத்தாத்திரேய குருவே நமஹ !

ஓம் ஸ்ரீ ததிஷி மகரிஷி குருவே நமஹ

ஓம் ஸ்ரீ போக நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஈஸ்வர பட்ட குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ராம் ஸர்மா ஆச்சார்ய குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வர குருவே நமஹ!

ஓம் பரம் தத்வாய நாராயண குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ காயத்ரி சித்த முருகேசு குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ அன்னப்பூர்ணாம்பா ஸஹித அமிர்தானந்தா நாத குருவே நமஹ!

ஓம் ஸ்ரீ ஸோமேஸ்வரியம்பா ஸஹித ஸோமானந்த நாத குருவே நமஹ


இதனை படிக்கும் போது எழுத்துக்களினுடாக உங்கள் சித்தத்திற்கு (subconscious mind) குரு நாதருடைய அருள் காந்த சக்தி பாய்ந்து உங்களுக்கு ஆன்ம முன்னேற்றமும், நன்னிலையும் உண்டாகும்!


மனிதனில் தெய்வ சக்தியை விழிப்பிக்கும் குரு-அகத்திய-காயத்ரி சாதனா உபதேசம்: பயிற்சிக் குறிப்பினை Download here


2018 ஸ்ரீ காயத்ரி உபாசனை சாதனை வகுப்புகளில் இணைவதற்கான படிவம்


நீங்கள் இணைப்பு படிவத்தினை நிரப்பி அனுப்புவதுடன், வாராந்தம் வெள்ளிக்கிழமைகளில் காலை 05.30 – 07.00 மணி (IST) அளவில் உங்கள் தியான அறையில் இருந்து மேலே கூறப்பட்ட குரு மந்திரங்களை கூறி ஏற்பு நிலையில் (receptive state) இருந்தால் மன ஆகாயத்தின் (Cosmic mind) முலம் அனுப்பும் தெய்வ காந்த சக்தியினை பெற்று உங்கள் ஆன்ம பலத்தினை கூட்டிக்கொள்ளலாம். இதன் பின்னர் உங்கள் சாதனை விரைவாக பலனளிக்க தொடங்கும்.


அகத்தியர் மூலகுரு மந்திர தீக்ஷை இங்கே


உங்களுக்கு கிடைக்கும் இந்த தெய்வ ஆற்றல் இந்த தளத்தினை பார்ப்பவர்கள் அனைவருக்கும் கிடைத்திட எண்ணிடுங்கள்!


ஸ்ரீ ஸக்தி சுமனனின் குரலில் ஆத்ம யோக ஞான பாடங்கள் இங்கே


உபதேசம் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்
இங்கே


-அன்புடன் சுமனன் -

சிவயோக ஞானத்திறவுகோல் நூலினை வாங்க படத்தினை அழுத்தவும்

Monday, March 30, 2015

வசந்த நவராத்ரி லகு காயத்ரி அனுஷ்டான பூர்த்தி யக்ஜம் - 29 March 2015

வசந்த நவராத்ரியில் லகு அனுஷ்டானம் எனக்கூறப்படும் ஒன்பது நாட்களில் மந்திர அட்சர ஆயிரம் ஜெபிக்கும் சாதனையினை காயத்ரி மந்திரத்திற்கு செய்யலாம் என்று கூறியிருந்தோம். 

சில அன்பர்கள் முயற்சித்திருந்தாலும் குறித்த எண்ணிக்கையினை பூர்த்தி செய்ய முடியாமல் போய்விட்டது என்று கவலைப்பட்டார்கள். கவலைப்படத்தேவையில்லை. அன்னை பராசக்தி படிப்படியாக அதற்குரிய வல்லமையினை தருவாள். மேலும் செய்த அளவிற்கு பலன் உண்டு. 

யக்ஜம் என்ற சொல்லிற்கு மூன்று பொருள் உண்டு. முதலாவது தேவ வழிபாடு, இரண்டாவது தர்மம் மூன்றாவது கூட்டுறவு. என்பது. எமக்கு இலகுவாக கிடைக்கும் பசு நெய், காய்ந்த மரசுள்ளிகளை அக்னியில் போட்டு குறித்த மந்திரங்களை ஜெபித்து  அவற்றின் பலன்களை எமக்கு மட்டும் அல்லாமல் இவ்வுலகில் உள்ள அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று ஆழமாக எண்ணி எண்ண சக்தியில் தெய்வ சக்தியை கலக்கும் ஒரு செயல் முறை. இந்த செயலில் எண்ணமும், செயலும் தூய்மை பெறுகிறது. 

ஆக யக்ஜம் என்பது அனைவரும் கூட்டுறவாக செய்யும் செய்முறை. சமூக ஒருமைப்பாட்டிற்கும், ஒருங்கிணைவிற்கும், ஒற்றுமைக்கான குறியீடு. காயத்ரி என்பது புத்தியினை தூய்மைப்படுத்தி அனைவரையும் ஒருங்கிணைக்கும் பிரபஞ்ச சக்தி.


பூர்ணாகுதி 

இந்த வசந்த நவராத்ரி எமது நண்பர்கள், இந்த தளத்தை வாசிக்கும் அனைத்து அன்பர்கள், எம்மிடம் குணம் வேண்டி வைத்தியம் பார்க்க வருபவர்கள், எமது நாட்டு மக்கள், உலக மக்கள் அனைவரும் நலம் பெறவேண்டும் என்ற எண்ணி தேவியிடம்;
அருளொடு செல்வம் ஞானம் ஆற்றலும் பண்பும் பொருள் நலம் பொறுமை ஈகை பொருந்திடச் செய்வாயம்மா, ஆயுளாரோக்கியம் வீரம் அசைந்திடா பக்தி அன்பு தேயுறா செல்வம் கீர்த்தி தேவியே அருள்வாயம்மா !

என பிரார்த்தித்து பூர்ணாகுதி தரப்பட்டது.  இந்த யக்ஜத்தின் பலன் இதை படிக்கும்  உங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அதனை பெறுவதற்கு கீழ்வரும்  படிமுறைகளை பின்பற்றவும். 

நீங்கள் பூஜை அறையில் அமரும் நேரத்தில் எமது வலைத்தளத்தில் தரப்பட்டுள்ள குரு நாமங்களை கூறி, பின்னர் ஒன்பது தடவை காயத்ரி மந்திரம் ஜெபித்து. கையில் சிறிதளவு விபூதி எடுத்து வைத்துக்கொண்டு பலஸ்மரணம் எனப்படும் சித்தத்தில் உள்ள  தன் பாபங்கள் அழிந்து, புண்ணியம் கிடைத்ததாக நினைத்துக் கீழே உள்ள சுலோகத்தைச் சொல்லவும்:
ஒழிந்தன துன்பமெல்லாம் ஓடின பகைமையெல்லாம்,கழிந்தன வினைகளெல்லாம், காந்ந்தன பாபமெல்லாம்!இன்பமும் சுகமும் பேறும் இருந்திடும் பாக்கியங்கள்,நன்மையும் செய்வம் கீர்த்தி, நல்கிடும் அருளும் ஞானம்நாடிய பொருள் கைகூடும்நலிவெலா மகன்று ஓடும்தேடிய தவத்தின் சித்தி தெரிந்திடும் வாழ்க்கை மீதில்.ஓம் சாந்திஸ் சாந்திஸ் சாந்தி.
சொல்லி "இன்பமே சூழ்க எல்லோரும் வாழ்க" என்ற எண்ணத்துடன் நெற்றியில் இட்டு உங்கள் குடும்பத்தவர்கள் அனைவரும் நலம் பெறவேண்டும், சூழ உள்ளவர்கள், நாடு, உலகம் நலம் பெறவேண்டும் என எண்ணி விபூதியை தரித்துக்கொள்ளவும். 

மன ஆகாயத்தில் உங்களுக்காக பகிர்ந்தளிக்கப்பட்ட சக்தி உங்களை வந்தடைந்து எல்லா நன்மைகளையும் தரும்!

ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 02 : அமிர்த ஆகர்ஷண பிரணாயாமம்

உடலி அமிர்த கலையினை அதிகரிப்பதற்கான சூட்சுமத்திற்கு ஒரு முறை கூறியுள்ளார். அண்டத்தில் உள்ளது பிணடத்தில் உண்டு என்பதற்கமைய பிண்டத்தில் உள்ள அமிர்தம் அண்டத்தில் உள்ள சந்திரன் எனப்படும் சோமனில் இருந்து பெறப்படுகிறது. இதனை பிராணன் மூலம் எமது உடலில் ஈர்த்து சேமித்துக்கொள்ளலாம். அந்த முறை வருமாறு; 

பௌர்ணமிக்கு முன்பாக மூன்று நாட்களும் பின்பாக மூன்று நாட்களுமாக மாதத்தில் ஏழு நாட்கள் செய்யவேண்டும். இதை மேகம் மறைக்காத நிலவை பார்த்துக்கொண்டு செய்யலாம். சந்திரனை பார்த்தவாறு வசதியான ஆசனத்தில் அமரவும். தலை. கழுத்து, முதுகுதண்டு நேர்கோட்டில் இருக்கமாறு நிமிர்ந்து இருக்க வேண்டும். முதலில் காற்றை மூக்கின் வழியே ரேசிக்கவேண்டும். வாயை அகலமாக திறந்து அதன் வழி முடிந்தவரை காற்றை இழுக்கவும். இப்போது காற்றும் நிலவின் கதிர்களும் உள்ளே நிரம்பும். வாயை மூடி இயலுமான அளவு நேரம் கும்பகம் செய்த பின்னர் மூக்கின் வழியே மெதுவாக காற்றை வெளிவிடவும். சிறிதுநேரம் மூச்சுப்பாதையை காலியாய் விட்டு சூன்ய (பாஹ்ய) கும்பகம் செய்யவும். பின்னர் மறுபடியும் முன்மாதிரியே உள்ளிழுக்கவும். குறைந்தது ஐந்து தொடக்கம் பதினைந்து சுற்றுக்கள் இந்த பிரணயாமத்தினை ஏழு நாட்களுக்கு செய்யவும். பயிற்சி முடித்தபின்னர் சாந்தி ஆசனத்தில் படுத்து ஓய்வு எடுத்துக்கொள்ளவும். இந்த நிலையில் சந்திராமிர்தமாகிய அமுதம் சுரந்து தேகத்தைத் தூய்மையாக்கும். 


குறிப்பு: 
இந்த சாதனை கற்பித்த சூழல் தூய்மையான வளி மாசற்ற நிலையில் ஆகும். தற்காலத்தில் அநேக நகரங்கள் வளிமண்டலங்கள் மாசுற்ற நிலையில் இருப்பதால் திறந்த வெளியில் வாயினால் சுவாசிப்பது நுரையீரல் பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஆகவே தகுந்த இடத்தினை அறிந்து சாதனை செய்ய  வேண்டும். 

Sunday, March 29, 2015

ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தம் - 01

ஸ்ரீ கண்ணைய யோகியார் 1882ம் ஆண்டு வைகாசி மாத பௌர்ணமியில் பிறந்து, ஆறு வயதில் அகஸ்திய மகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டு பதினாறு வருடங்கள் பொதிகை, நீலகிரி போன்ற மலைகளில் அமைந்துள்ள சூக்ஷ்ம ஆசிரமத்தில் ஆன்ம, யோக, ஞான சாதனைகள் பயின்று ஆன்ம பரிணாமத்தினை பூர்த்தி செய்து பின்னர் தனது உலக பரிணாமத்தையும் பூர்த்தி செய்வதற்காகவும், ரிஷி பரம்பரை மாணவர்களுக்கு தற்காலத்திற்கு ஏற்றவகையில் யோக வித்தையினை பயிற்றுவிப்பதற்காகவும் ஸ்ரீ அகஸ்திய மகரிஷியின் ஆணையின் பேரில் பூவுலகில் எண்பது வருடங்கள் வாழ்ந்து, யோகமாணவர்களுக்கு பல்வேறு கலைகளை கற்பித்த உன்னத யோகி, தான் பல்லாண்டு காலம் வழி, நூறாண்டு வாழும் சாதனை என்பதனை கற்பித்ததற்கு சான்றாக நூற்று எட்டு ஆண்டுகள் வாழ்ந்து   1990ம் ஆண்டு கார்த்திகை பௌர்ணமியில் உடலை விட்டு இன்றும் சூக்ஷ்மமாக வேண்டியவர்களுக்கு யோக ஆன்மீக வித்தைகளை கற்பித்து வழிகாட்டி வருகிறார். 

யோகியாரின் மாணவர்களில் நீண்டகால மாணவர் இலங்கை, நுவரெலியா  ஸ்ரீ காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள். சுவாமிகள், 1957 அளவில் வேலை நிமித்தமாக திருச்சி சென்றபோது ஸ்ரீ ரங்கம் கோயிலில் வைத்து ஒரு முதியவரால் நீலகிரி மலைச்சாரலில் உள்ள ஆசிரமம் ஒன்றுக்கு அழைத்து செல்லப்பட்டு பின்னர் அந்த முதியவரால் சென்னையில் அம்பத்தூரில் கண்ணைய யோகி என்பவர் இருக்கிறார், அவரே உனது குரு என்று அனுப்பி வைக்க அவரை சரண் புகுந்து அவர் உடல் நீக்கும் 33 வருடங்கள் வரை சீடனாக இருந்து, அவர் இட்ட ஆணைப்படி காயத்ரி மந்திரத்தை உன்னை தேடி வரும் மக்கள் அனைவருக்கும் உபதேசி என்ற வாக்கின் படி  அவர்காலம் வரை உபதேசித்து வந்தார். இன்றும் அவரது பணி ஸ்ரீ காயத்ரி பீடத்தினால் செவ்வனே நடத்தப்படுகிறது. 

ஸ்ரீ கண்ணைய யோகியாரின் சிறப்பியல்பே அவர் தான் கற்பித்த பாடங்களை தனது கையெழுத்த்தில் பாடங்களாக எழுதி கொடுப்பார். அந்த பாடங்கள் அவரின் மாணாக்கரான எனது குருநாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகளிடமிருந்து கற்கும் பாக்கியத்தை எமக்கு தந்தார்.  

இதேபோல் கண்ணைய யோகியாரின் பாடங்களை ஆன்மீக படைப்புகளாக சென்னையில் வெளியிடும் பணியினை அவரது இன்னுமொரு நேரடி மாணவரான அருட்திரு. இராஜமோகன் ஐயா அவர்கள் ஆத்ம ஞான யோக சபை மூலம் செய்துவருகிறார். 

எமது வாசகர்களுக்கு நாம் எமது குருநாதரிடமிருந்து கற்ற இந்த உன்னத யோகியாரின் உபதேசங்களை, யோக விளக்கங்களை சுருக்கமாக ஸ்ரீ கண்ணைய ஆத்ம யோக ஞான தத்துவ அமிர்தமாக தரலாம் இன்று வசந்த நவராத்திரியிலிருந்து பதிவிடலாம் என்று எண்ணியுள்ளோம். 

Saturday, March 28, 2015

சித்தர் யோக ஆசிரியர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்களின் ஆசியும் வீட்டில் வாசியோக பாடங்களும்

பேராசிரியர், முனைவர் யோகி வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி ஐயா அவர்கள் சித்தர் வழியில் உயர்ந்த சாதனையான சிவயோகத்தில் இருந்து காயசித்தி, யோக சித்தி, வேதை சித்தி பெற்றவர். சித்தர் மருத்துவம், கற்பம், யோக சாதனை என்பவற்றை  விஞ்ஞான ரீதியாக விளக்கும் ஆற்றல் உள்ளவர். ஐயா விவசாய விஞ்ஞானத்தில் (வேளாண்மை) முனைவர் பட்டம் பெற்ற ஒய்வு பேராசிரியர்.

சித்தர்களின் வாசி யோகத்தினை தற்காலத்து மக்கள் விளங்கிக்கொள்ளும் படி யாரையும் பயமுறுத்தாமல், குழப்பாமல் எளிய பாடங்களாக எழுதி அனைவரும் பயன்படும்படி வெளியுட்டுள்ளார். தனது அனுபவத்துக்கு வராத எதையும் வெளிப்படையாக தனக்கு தெரியாது என்று கூறும் வெளிப்படையான மனமுடையவர். அதேபோல் தான் அறிந்த அனுபவித்த விடையத்தை அதீத கற்பனைகளை சேர்க்காமல் உறுதியுடன் உரைப்பவர்.

தன்னுடன் உரையாடும் அனைவருக்கும் “இறை அருள் பெறுக! தான் அவன் ஆகுக” என்ற சித்தர்களின் உயர்ந்த இலட்சியத்தை ஆசியாக கூறி அவர்கள் மனதில் உயர்ந்த ஆன்ம இலட்சியத்தை விதைப்பவர்!  

ஐயாவுடன் எனக்கு தொடர்பை ஏற்படுத்தி தந்தது அகத்தியர் ஞானம் முப்பது, பல்லாண்டுகளாக குருநாதர் ஆணையில் நாம் கற்று வரும் அகத்தியர் ஞானத்திற்கு ஐயா சுருக்க பொருள் கூறியிருக்கிறார். அதே நூலை நாம் இங்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் மாலையில் ஒருமணிநேரம் கற்று வருகிறோம். தற்போது குருநாதர் அருளால் முழுமயான விரிவான சித்த வித்யா உரையினை எழுதி வருகிறோம். அதற்கு ஐயா மதிப்புரை தருவதாக ஆசி கூறியிருக்கிறார். 

ஐயாவுடன் சித்தர் தத்துவங்கள், விஞ்ஞானம் பற்றி உரையாடும்போதெல்லாம் எனது எழுத்துக்களையும், வலைத்தளத்தையும் பற்றி கூறுவதற்கு மனம் ஒப்புவதில்லை. பெரியவரான அவரது அறிவிற்கும் ஞானத்திற்கும் முன்னால் சிறியவனான எனது எழுத்துக்கள் எம்மாத்திரம்! இந்த நிலையில் ஐயா எனது வலைத்தளத்தை பார்த்தபின்னர் அவராக தெரிவித்த வாழ்த்துக்களும், ஆசிகளும் என்னை ஆனந்தத்தின் எல்லைக்கே கொண்டு சென்றது.

அவரது வாழ்த்தும் ஆசிகளும் வருமாறு;
“ஆன்மிக தகவல் , சித்தர்கள் பற்றிய செய்திகள் ஜோதிடம் , வைத்தியம் ஆகி அனைத்தும் குவித்து வைத்துள்ள பெரும் பொக்கிஷம் இந்த வலை பூ . அருமையான பதிவுகள் .  அறிய செய்திகள். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் . தங்களுக்கும் தங்களை சரந்தவர்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் . எல்ல வளமும் நலமும் கிடைக்க இறை அருள் புரிக . !!!
அன்பான ஆசியுடன் 
வே. இராஜா கிருஷ்ண மூர்த்தி 


ஐயாவின் வாசி யோக பாடங்களை இந்த தளத்தில் படிக்கலாம் ; http://www.siddharyogam.com/

யோக சாதனை, சித்தர் நூற்கள் படிப்பவர்களுக்கு பல அரிய அனுபவ உண்மைகளை விளக்கும் தளம்.

எமது வாசகர்கள் அனைவரும் வாசித்து பயன் பெறுக!

Thursday, March 26, 2015

தற்கால சித்தர் தத்துவ அறிஞர்கள்

பேராசிரியர் தண்டங்கோரை நடேச கணபதி அவர்கள் தமிழ் நாட்டின் மிகுந்த புலமையுடைய தத்துவ பேராசிரியர். பலரும் பொருள் காண அஞ்சும், குழம்பும் சித்தர் பாடல்களிற்குள் மூழ்கி தைரியமாக மூடநம்பிக்கை இன்றி சித்தர்களின் பரிபாஷை எனப்படும் குறியீட்டு மொழியினை விளங்க, விளக்க  முயற்சித்தவர். சித்தர் பாடல்களை ஆங்கில வாசகர்களுக்கு, ஆய்வாளர்களுக்கு, சாதகர்களுக்கு அறிமுகப்படுத்தியதில் முன்னோடியானவர்.  

அத்தகைய சித்தர் தத்துவத்தில் பெரும் புலமை வாய்ந்த பேராசிரியர், முனைவர் டி. என் கணபதி ஐயா அவர்களுடன் நேற்று தொலைபேசியில் உரையாடும் வாய்ப்பு கிட்டியது.

எண்பத்து மூன்று வயதிலும் இளமையான குரலும், தெளிவான அன்பான பேச்சும் உடைய ஐயா வெறுமனே ஒரு சித்தர் தத்துவத்தை ஒரு ஆய்வுப்பொருளாக பார்க்காமல் பொருளுணர்ந்து அனுபவிக்கும் சித்தர் பரம்பரையினை சேர்ந்த ஒருவருடன் உரையாடிய திருப்தி கிடைத்தது.

சித்தர்கள் கூறிய ஞானத்தை விட்டுவிட்டு வெறுமனே அவர்களை ஒரு மாயாவிகள் மாதிரி திகில் கதை எழுதி குவிப்பவர்களை பற்றி கவலைப்பட்டார்.
அகத்தியரைப்பற்றி ஒரு நூல் எழுதிக்கொண்டு இருப்பதாகவும், வெகு விரைவில் வெளிவரும் எனவும் கூறினார். இந்த வரலாறு தற்போதைய மக்களின் நம்பிக்கையுடன் முரண்படும் என்று ஒரு புதிரையும் வைத்திருக்கிறார். சித்தர்களுக்கு வரலாறு எழுதுகிறார்கள். சித்தர்கள் ஒளிநிலை அடைந்தவர்கள். கூடுவிட்டு கூடுபாயும் வல்லமை உள்ளவர்கள், எந்த கூட்டின் வரலாற்றை எழுதுகிறார்கள் என்று கூறி சிரித்தார். பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் இலங்கையிற்கு வருவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார். வெகுவிரைவில் அதற்குரிய காலம் கனிந்து வருவதற்கு குருநாதர் வழிவகை செய்ய பிரார்த்திப்போம்.

ஒவ்வொரு திங்கட்கிழமையும் நாம் அகத்தியர் ஞானம் கற்பதை கூறினேன். பாட்டினை பாராயணமாக செய்யாமல் பொருளுணர்ந்து படிக்கும்படி அறிவுரை கூறினார். தனது சித்தர்களின் குறியீட்டு மொழியும் சூனிய சம்பாஷனையும் பார்க்கும்படி கூறியுள்ளார்.

தான் கணணி, தட்டச்சு பாவிப்பதில்லை என்றும் பேப்பர் பேனாவில்தான் தனது எழுத்துப்பணி முழுவதும் நடப்பதாக கூறினார்.

தமிழகத்தின் முன்னணி ஆன்மீக பேச்சாளர் சுகி சிவம் அவர்களை பற்றி கூறும்போது அவர் எனது வகுப்பு மாணவர் அல்ல, நான் வகுத்த மாணவர் என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.


ஐயாவின் பணி தொடர குருநாதரும் தேவியும் துணையிருக்க பிரார்த்திக்கிறோம். 

Saturday, March 21, 2015

இராஜயோகமும் ஹட யோகமும் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி

இராஜயோகமும் ஹட யோகமும் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி
*****************************************************************

யோகம் பயில்பவர்கள் கட்டாயம் தெளிவிற்கு வாசிக்க வேண்டிய கட்டுரைகள்

16 November 1964 இல் இலங்கை ஆத்மஜோதி இதழில் வந்த கட்டுரை

யோகம் என்பது ஜீவான்மா பரமான்மாவுடன் ஒன்றும் நிலை,
ஹடயோகிக்கும் இராஜயோகிக்கும் உள்ள வேற்றுமை என்ன?
எது உண்மை யோக மார்க்கம்

போன்றவற்றை விளக்கும் அரிய கட்டுரை







ஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ்


ஸ்ரீ நாக நாத சித்தர் வரலாற்று சுருக்கம் - ஆத்ம ஜோதி இதழ் 
*********************************************************************

ஈழத்து சித்தர் மரபு பெரும்பாலும் யோகர் சுவாமிகள், கடையிற் சுவாமிகள் என்று யாழ்ப்பாணத்தை சுற்றியே இருந்து வந்துள்ளது.

ஆனால் மத்திய மலை நாட்டில் பிறந்து தமது யோகசாதனையினால் உயர்ந்த சித்தர்கள் என்று கூறும் போது 1) மாத்தளை பரமகுரு சுவாமிகளும், 
2) குயில்வத்தை நாகநாதசித்தரும் . 
3) நாவலப்பிட்டி நவநாத சித்தர் (குயின்ஸ்பெரி தோட்டத்தில் சமாதி கொண்டவர்) குறிப்பிடத்தக்கவர்கள்.

அந்த வரிசையில் மலையகத்தில் பிறந்து மக்களோடு மக்களாக வாழ்ந்த நாகநாத சித்தரின் வரலாற்று குறிப்பு.





யோகத்தெளிவு - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி

16 December 1962 இலங்கை ஆத்மஜோதி இதழில் வெளிவந்த Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகியாரின் "யோகத்தெளிவு" என்ற கட்டுரை. 

யோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், யோகத்தை கற்பவர்கள், யோகத்தினை கற்பிப்பவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய அறிய கட்டுரை. 

இன்று ஆசனம் செய்ய தெரிந்தவுடன் புதுப்புது பெயர்களில் யோகத்தினை தமது மனம்போன போக்கில் உருவாக்கிக்கொண்டு, வியாபாரமாக்கி கொண்டு இருக்கும் இக்காலத்துக்கு தேவையான கட்டுரை. 

யோகம் என்பது யோகமே, அதற்கு எந்த அடைமொழியும் ஆதியில் இருக்கவில்லை, பிற்காலத்தில் தம்மை முன்னிறுத்துவதற்காகவும், தம் பெயர் நிலைப்பதர்காகவும் ஏற்பட்ட ஆடைமொழிகள் மக்களை பெரும் குழப்பத்தை ஆழ்த்தி இன்று யோகத்தின் இலக்கு தெரியாமல் மக்கள் குழம்புகின்றனர். 

யோகத்தில் ஆர்வமுள்ளவர்கள், யோகத்தை கற்பவர்கள், யோகத்தினை கற்பிப்பவர்கள் அனைவரும் வாசிக்கவேண்டிய அறிய கட்டுரை. 





பிராண சக்தி - - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி

16 November 1962 இல் இலங்கை ஆத்மஜோதி பத்திரிகையில் வெளியான - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி யாரின் பிராண சக்தி என்றும் கட்டுரை. 

இந்த கட்டுரை பிராண சக்தி பற்றிய தத்துவ ஆராய்ச்சியினை கூறுகிறது. 





பிராண பிரணாயாம விளக்கம் - Dr. பண்டிட். ஜி. கண்ணைய யோகி

14 January 1963 இல்  இலங்கை ஆத்மஜோதி இதழில் வெளிவந்த ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் பிராண பிரணாயாம விளக்கம் எனும் கட்டுரை.

பிராணனின் உண்மைப்பொருள் என்ன?
பிராணன் எப்படி உடலில் செயல் கொள்கிறது?
பிரணாயாமம் என்றால் என்ன?




Wednesday, March 18, 2015

ஹிந்து மதத்தின் சிறப்புகள் - ஸ்ரீ கண்ணைய யோகியாரின் கட்டுரை

14 March 1963 ம் ஆண்டு இலங்கை ஆத்ம ஜோதி ஆன்மீக இதழில் வந்தது.

பின்வரும் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன;

  • ஹிந்து மதத்தை ஏன் சனாதன தர்மம் என்று கூறுகிறோம்.
  • மண்ணுலகில் வாழும்போதே மோக்ஷத்தை பெறும் ஞானத்தை கூறிய ஒரேமதம் 
  • மோக்ஷம் என்பது கடவுள் கொடுத்து பெறுவதல்ல, ஒருவன் தனது குணங்களை தெய்வ தன்மைக்கு உயர்த்தி பெறுவது. 
  • மற்றைய மதங்களில் பாவத்தினை போக்கி கொள்ள இறைவனை இறைஞ்சி பெரவேண்டும் என குறிப்பிட ஹிந்து மதம் இறைசக்தியை ஈர்த்து தன்வசப்படுத்திக்கொண்டு அதன் மூலம் தனது இன்பங்களை பெறலாம் என்ற வழியினை கூறுகிறது. 
  • மந்திரங்கள் எனும் சப்த அலைகளால் இறைசக்தியை கவரும் அற்புத முறைகளை தரும் தர்மம் ஹிந்து மதம். 
  • ஜடத்திலும் இறைசக்தியை விழிப்பத்து மனிதனில் சூக்ஷ்ம தன்மையினை உணரச்செய்ய வழிகாட்டும் மதம். 





ஆணிற்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் ஏன் தேவை - யோகியரின் யோக விளக்கம்

குருநாதர் ஸ்ரீ கண்ணைய யோகீஸ்வரரின் ஆன்மீக கட்டுரை, 1965 ம் ஆண்டு இலங்கை ஆத்மஜோதி ஆன்மீக பத்திரிகையில் வந்தது.




Sunday, March 15, 2015

காயத்ரி சாதனை வழிகாட்டி


எமது தளத்தினை படித்து காயத்ரி ஜெபம் செய்பவர்களுக்கும், அதிலிருந்து உயர்ந்த சாதனை செய்து மன, பிராண, ஆன்ம சக்திகளை அதிகரித்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இதனை எப்படி தொடங்குவது என்பதில் பல்வேறு மனத்தடங்கல்கள் இருக்கும். அவற்றில் இருந்து வெளியே வந்து தெய்வான்மீக பாதையில் எப்படி முன்னேறுவது என்பது பற்றி இந்த பதிவு படிமுறைகளாக வழிகாட்டும். மேலும் உங்களை நீங்கள் எந்த நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு எப்படி தயாற்படுத்திக்கொள்வதுன் என்பது பற்றி விளக்கத்தினையும் தரும்.
  1. மந்திர ஜெபம் என்பது மூடநம்பிக்கையில் அல்லது ஏதோவொரு நம்பிக்கையில் கண்ணை மூடிக்கொண்டு இயந்திர தனமாக உச்சரிப்பதில்லை. அது பிராணன் – மனம் – உடல் ஆகிய மூன்றையும் இணைத்து சக்தி பெறும் முறை.
  2. பிராணனை இணைக்க மூச்சினை மெதுவாக, ஆழமாக உள்ளிழுத்து வெளிவிட தெரிந்திருக்க வேண்டும். நிறுத்துவது அவசியமில்லை. நாடிசுத்தி தெரிந்தவர்களாக இருப்பின் குறைந்தது ஐந்து வட்டமாவது செய்துவிட்டு ஜெபத்தினை ஆரம்பிக்கவேண்டும்.
  3. மனதிற்கு காயத்ரி போன்ற மந்திரமானால் மந்திரத்தின் பொருளை கிரகித்து வைத்திருக்க வேண்டும். ஜெபத்தின் போது மனம் அலையும் வேளைகளில் மந்திரத்தின் பொருளை சிந்தித்து நிறுத்த வேண்டும்.
  4. உடல் வசதியாக இருக்கவேண்டும். ஜெபத்தின் போது முள்ளந்தண்டு, தலை நேராக இருக்கவேண்டும் என்பதே நிபந்தனை. அதற்காக உங்களால் முடியாத பத்மாசனம் போன்ற கடின ஆசனங்கள் கைவந்தபின்னரே ஜெபத்தினை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்து விடாதீர்கள். உங்களுக்கு வசதியாக பஞ்சு மெத்தையில் அமர்ந்து சுகாசனம் இட்டு செய்யலாம்.அல்லது முதுகினை நேராக வைத்து இருக்க கூடியவாறு நாற்காலியில் இருந்தும் செய்யலாம்.
  5. இப்படி மேலே கூறிய விடயங்களை ஒழுங்கு படுத்தி கொண்டு எவ்வளவு ஜெபம் செய்வது என்பதனை துணிந்துகொள்ள வேண்டும். அந்த எண்ணிக்கை உங்களின் நாளாந்த வாழ்க்கை நடவடிக்கைகளை செய்துகொண்டு நிம்மதியாக சாதனை செய்ய கூடிய அளவாக இருக்கும். ஆரம்பத்தில் 09 என்று தொடங்கி ஒருவாரத்தில்  18 ஆக அதிகரித்து மூன்றாவது வாரத்தில்  27 ஆக்கி நான்காவது வாரத்தில் 54 எண்ணிக்கை கொண்டு வரவேண்டும். ஐந்தாவது வாரத்தில் 108 ஜெபம் செய்யும் அளவிற்கு வந்தால் ஒரு சாதகன் என்ற நிலையினை அடைந்து விட்டீர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
  6. மேலேகூரியபடி செய்துகொண்டு வருப்ம்போது காயத்ரி சித்த சாதனையினையும் சேர்த்து செய்து வரவேண்டும்.
  7. இப்படி உங்களை தாயார்படுத்திய பினனர் லகு அனுஷ்டானம் எனும் ஒன்பது நாட்களில் 24000 ஜெபிக்கும் சாதனையும், பூரண அனுஷ்டானம் எனும் நாற்பது நாட்களில் 125,000 ஜெபிக்கும் சாதனையும் விருப்பமுள்ளவர்கள் முயற்சிக்கலாம். இத்தகைய அனுஷ்டானங்கள் ஒன்று இரண்டு முடித்தபின்னர் தினசரி 108 ஜெபம் செய்து வருவார்களே ஆனால் அவர்களுடைய மன, பிராண சக்திகள் பலப்பட்டு தமது வாழ்க்கை பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி பெறும் வலிமையினை பெறுவார்கள். 

Saturday, March 14, 2015

இலங்கையில் உள்ள சித்தர் தலங்கள் - புஜண்டகிரி நாக நாத சித்தர்

குயில்வத்தை சிவாலயத்தில் உள்ள காக புஜண்டர் சிலை 
மூன்று நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவர் மூலம் இந்தியாவிலிருந்து ஒரு சாது வந்திருப்பதாகவும் அவர் இலங்கையில் நூறாண்டுகளுக்கு முன்னர் மலையக தோட்ட மக்களிடையே வாழ்ந்து தபஸ் புரிந்து பின்னர் சிவகங்கை மாவட்டம் வடவன் பட்டியில் சமாதியான நாகநாத சித்தரின் ஜீவ சமாதியை பராமரிப்பவர் என்றும் இலங்கயில் நாக நாத சித்தர் வாழ்ந்த இடங்களை ஈழத்து சித்தர்கள் என்ற ஆத்ம ஜோதி நா. முத்தையா ஐயா அவர்கள் எழுதிய நூலின் உதவியுடன் தனக்கு கிடைத்த சில காகபுஜண்ட மகரிஷியின் ஓலையுடன் புஜண்ட மகரிஷியின் சீடரும் இலங்கையில் வாழ்ந்து சித்தர்  தபம் செய்த இடங்களை பார்த்து தரிசித்து செல்வதற்காக வந்து செல்வதாகவும் கூறினார். மேலும் தான் என்னை சந்திக்க விரும்புவதாகவும் சனிக்கிழமை கொழும்பில் சந்திக்கலாம் என்றும் கூறினார். அவருடன் பேசும்போது நான் இலங்கையில் இன்னொரு திசையில் இருந்தேன். சந்திக்கும் வாய்ப்பு இல்லை, மேலும் வார இறுதியில் நான் கண்டிக்கு செல்வதால் சந்திக்கும் வாய்ப்பு இல்லை என்றும் கூறினேன். அதற்கு தான் வெள்ளிகிழமை மாலை தான் கண்டியில் நாகநாத சித்தர் தபஸ் புரிந்த ஒரு குகை இருப்பதாகவும் தான் அங்கு செல்வதாகவும் கண்டி வரும்போது தன்னை அங்கு சந்திக்கலாம் என்றும் கூறினார். அப்போதைய சூழல் பிரகாரம் செல்லுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இருக்கவில்லை. சரி குருவருள் முடிவு செய்யட்டும் என்றுவிட்டு வேலையில் மூழ்கிவிட்டேன். எதிர்பாராத விதமாக வெள்ளிக்கிழமை கொழும்பு வரவேண்டியதாகிவிட்டது. வேலை முடித்து கண்டி செல்ல எப்படியும் இரவு பத்துமணியாகும். ஆகவே சந்திப்பது சாத்தியமில்லை என்ற எண்ணத்தில் வேலையினை தொடங்க எதிர்பாரதவிதமாக இரண்டு உறவினர்கள் கொழும்பு வர அவர்களை கூட்டிக்கொண்டு மீண்டும் மாலை கண்டி செல்லவேண்டும் என்பதால் ஒருமணித்தியாலம் முன்னராக புறப்படவேண்டியதாகிவிட்டது. வாகன நெரிசல் எல்லாம் தாண்டி கண்டி வர இரவு எட்டு முப்பது ஆகிவிட்டது. அதேவேளை அந்த சாது இன்று மாலை சென்னை செல்வதால் நேற்றிரவு கண்டியிலிருந்து கொழும்பு செல்லவேண்டும் ஆகவே சந்திப்பது சாத்தியமில்லை என்ற நினைப்புடன் இருக்க அவரிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. தான் இன்னும் புறப்படவில்லை எனக்காக காத்திருப்பதாகவும், ஒருதடவை வந்து நாகநாத சித்தர் தபஸ் செய்த குகையினையும், கோயிலையும் தரிசித்து செல்லுமாறும் கேட்டார். சரி என்று முடிவெடுத்து விட்டு கண்டியில் இருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தமிழர்கள் செறிந்து வாழும் அம்பிட்டிய என்ற ஊரினை நோக்கி செல்ல ஆரம்பித்தோம். சரியா இருபது நிமிடங்களில் மலைப்பாங்கான தோட்டப்பகுதியை அடைந்துவிட்டோம். அவர்கள் வரும்படி கூறிய இடத்தை அடைந்தவுடன் அங்கு கோயிலை பராமரிக்கும் அன்பர் ஒருவருடன் சாது வரவேற்றார். அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்டு காரில் இன்னும் மலைஏற ஆரம்பித்தோம். இலங்கையின் வீதி அபிவிருத்தியின் பயனாக காபட் ரோட்டில் பயணித்து ஒரு இடத்தில் நின்றோம்.
ஒரு செங்குத்தான மலையில் சிறிது ஏறியவுடன் பெரிய கருங்கல் அந்தக்கல்லில் குண்டலினி விழித்து சகஸ்ராரத்தில் விரிந்த நிலையினை குறிக்கும் ஐந்து தலை நாகம் தலை மேல் விரிந்து நிற்க நாகநாத சித்தர் தபஸ் கோலத்தில் பத்மாசனத்தில் வீற்றிருக்கும் ரூபமும், அருகில் சித்தர்களில் தாயான வாலை சக்தியும் செதுக்கப்பட்டு மேலே “புஜண்டகிரினாதன் துணை 1920
என்று செதுக்கப்பட்டிருந்தது. அருகில் கணபதி பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது. இவை நாகநாதரின் சீடாராக அந்த தோட்டத்தில் வசித்த அன்பர் ஒருவர் அவரது ஆசியின் பின்னர் சிற்பாச்சாரியாராக மாறி செதுக்கிய சிற்பங்கள் என்று கூறப்பட்டது. மேலே கல்லின் உச்சியில் ஏழடி உயரத்தில் சுப்பிரமணியர் சிலை செதுக்கப்பட்டிருந்தது. கோயிலை திறந்து சுவாமிகள் கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்தார்கள். தனியே தரிசனம்!

எல்லாம் முடிந்து வரும்போது மனதிற்குள் ஒரு பிரமிப்பு. இதேபோல் சிலவருடங்களுக்கு நாகநாத சித்தர் தபஸ் புரிந்த குகையான குயில்வத்தை சிவாலயத்திற்கு நண்பர் குமரகுரு அவர்களின் அழைப்பின் பேரில் சென்று கணபதி தர்ப்பணம், காயத்ரி பூஜை, யாகம் செய்து, பிள்ளைக்களுக்கு காயத்ரி மந்திரம் சொல்லிக்கொடுத்து அறநெறி பாடசாலையினை ஆரம்பித்துவிட்டு வந்தோம். அதே பாணியில் சில வருடங்கள் கழித்து நாகநாத சித்தரின் இன்னொரு இடத்திற்கு செல்லும் சந்தர்ப்பம், எனது விருப்பினை மீறி, எதுவித திட்டங்களும் இன்றி நடைபெறுகிறது.


நாகநாத சித்தர் ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷியின் சித்தர் குழாத்தை சேர்ந்தவர். இற்றைக்கு நூறுவருடங்களுக்கு முன்னர் இலங்கை வந்து மலையகத்தின் ஹட்டனில் உள்ள குயில்வத்தை, கண்டியில் அம்பிட்டிய என்ற ஊர், வன்னியில் உள்ள மாங்குளம் ஆகிய பிரதேசங்களில் மக்களுடன் மக்களாக வாழ்ந்து மக்களின் குறைகளை தீர்ப்பதற்காக தமது தபஸ் சக்தியை தெய்வ ரூபங்களாக பதிப்பித்து வைத்துள்ளார். இந்த கோயில்கள் கணபதி, சிவகாமசுந்தரி எனப்படும் வாலை, சுப்பிரமணியர் ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இறுதியாக மீண்டும் இந்தியா சென்று சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வடவன் பட்டி என்ற ஊரில் ஜீவசமாதியானார். 

நேரம் கிடைக்கும்போது இன்னும் எமக்கு தெரிந்த இலங்கையில் உள்ள சித்தர் தலங்களை பற்றி எழுதலாம் என்று எண்ணி உள்ளோம். குருவருள் எப்படி முடிவு செய்கிறது என்று பார்ப்போம்!

Thursday, March 12, 2015

ஸ்ரீ ஸக்தி சுமனன்

எனது சித்த வித்யா விஞ்ஞானம் வலைத்தளத்தில் யோக ஞானப்பதிவுகளை எழுதும் போது உபயோகிக்கப்படும் பெயரான சுமனனுடன்  "ஸ்ரீ ஸக்தி" இணைக்கப்பட்டு இனிமேல் "ஸ்ரீ ஸக்தி சுமனன்" என்று பாவிக்கப்படும்.

அன்புடன்

ஸ்ரீ ஸக்தி சுமனன்

Saturday, March 07, 2015

காயத்ரி மந்திர சாதனையும் ஆயுர்வேத வைத்திய சித்தியும்


ஆயுர்வேத வைத்தியர் ஒருவருக்கு நோயினை நிதானிக்கும் நுண்புத்தியும், சிகிச்சி, மருந்தினை முடிவு செய்யும் ஆற்றலும் அவசியம். இது வெறும் நூற்களை கற்பதாலோ பட்டங்களை பெறுவதாலோ வருவதில்லை. மனமும், பிராணனும் உடலில் எப்படி செயற்படுகிறது என்பதனை அறியும் ஆற்றல் இருக்க வேண்டும். இதனை தருவது காயத்ரி மந்திர சாதனை. இதற்கு சான்றாக இருப்பது மாதவ நிதானம்.
ஆயுர்வேதத்தில் இன்றும் நோயினை நிதானிப்பதற்கு மூல நூலாக இருப்பது மாதவ நிதானமாகும். இதனை எழுதியவர் மாதவாச்சாரியார் எனும் பிருந்தாவனத்தில் வசித்த ஞானி ஒருவராகும். இவர் இந்த நூலினை எழுதுவதற்கு முன்னர் பன்னிரண்டு வருடம் காயத்ரி உபாசனையினை செய்து வந்தார். ஆனால் காயத்ரி தேவியின் தரிசனத்தை பெறமுடியாமல் மனம் விரக்தியாகி ஒரு தாந்திரீகரின் ஆலோசனையின் பேரில் பைரவ உபாசனையினை தொடங்கினார். பைரவ உபாசனை தொடங்கி ஒருவருடத்திற்குள் பைரவரின் தரிசனத்தை பெற்றுவிட்டார். பைரவர் மாதவாச்சாரியாரின் முன்னால் தோன்றாமல் பின்புறமாக நின்றுகொண்டு அவரது விருப்பத்தினை கேட்கும்படி கூறினார். ஆச்சரியமடைந்த மாதவாச்சாரியார் தனக்கு முன்னால் வந்து தரிசனம் தரும்படி கூற, பைரவர் “காயத்ரி சக்தியால் ஒளி நிரம்பிய சாதகன் முன்னால் நான் நிற்க முடியாது” என்று பைரவர் கூற, ஆச்சரியமடைந்த மாதவாச்சாரியார் காயத்ரி சாதானையின் மகிமையினை கேட்க, பைரவர் காயத்ரி சாதனை சகல பாபங்களையும் சித்தத்தில் இருந்து அழித்து சாதகனுக்கு இறுதியில் இறை ஞானத்தை கொடுக்கும் என்று கூறி மீண்டும் காயத்ரி சாதனையினை தொடங்கும்படி கூறி மறைந்தார். இதன் படி மாதவாச்சாரியார் மீண்டும் தனது காயத்ரி சாதனையினை தோடங்கி அதன் பயனாக விழிப்படைந்த ஞானத்தின் மூலம் மாதவநிதானத்தை எழுதினார்.

ஆயுர்வேத சித்த வைத்தியர்கள் காயத்ரி சாதனையின் மூலம் என்ன பலனை பெறலாம் என்பதனை இந்த வரலாற்று உதாரணம் விளக்குகிறது.

காயத்ரி சாதனை செய்யும் வைத்தியர்கள் தமது நுண் புத்தி விழிப்படைந்து, நோயினை சரியாக நிதானித்து தீர்க்கும் வல்லமை பெறுவார்கள் என்பது அனுபவம்! 

பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02

    15-ஜனவரி-2024 பதஞ்சலி யோக சூத்திர வகுப்பு – 02 இன்று நீங்கள் கற்றுக்கொண்ட பதஞ்சலி சூத்திரங்கள்: சூத்திரம் – 03: ததா த்ரஷ்டு: ஸ்வ...